இலங்கையின் மலையகத் தமிழ்ச்சமூகம் கட்டமைக்கப்பட்ட பல்வேறு தடைகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றார்கள்.
அதுவே அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ் விசனம் வெளியிட்டுள்ளார்.
சட்டம் மற்றும் சமூக நிதியம் மற்றும் இளம் ஆய்வாளர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (27) கொட்டகலை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் ‘மலையக மக்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கான அணுகல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற மலையக ஆசிரியர்களின் ஆய்வு மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டார்.
மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை நினைவுகூரும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் ஜப்பானியத்தூதகரம் என்பவற்றின் அனுசரணையுடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு உரையாற்றிய மார்க் அன்ட்ரூ பிரான்ஞ், கல்வி மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவான ஆய்வு என்பவற்றின் ஊடாக மலையக சமூகத்தை முன்னேற்றப்பாதையில் முன்னகர்த்திச்செல்வதற்கான முக்கிய படிக்கல்லாக இந்த மாநாடு அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
