சமீபத்தில் நாட்டை தாக்கிய ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதிப்புகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் தனது பணியாளர் குழுவை எதிர்வரும் 22 முதல் 28 வரை கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விஜயம், இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கும் எதிர்கால தாங்கும்தன்மையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கும் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
இதன் மூலம் அரசின் நிதி உக்திகள், பொதுத் முதலீட்டு முன்னுரிமைகள் மற்றும் ஐ.எம்.எப் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் எதிர்கால திசை ஆகியவற்றில் தாக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட தலைவர் எவன் பாப்பஜார்ஜியு தெரிவிக்கையில், ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்களின் அளவும் பரப்பளவும் குறித்து அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்புகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.
இந்த மதிப்பீடுகள், நீ;டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் எதிர்கால முடிவுகளை எடுக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புயலால் உருவான பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதியாக உள்ளது என்பதையும் இந்த விஜயம் வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது, கொள்கை ஆலோசனைகள் வழங்குவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது உள்ளிட்ட ஆதரவு வழிகளையும் இந்த குழு ஆய்வு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை நீடித்த வளர்ச்சி பாதையை நோக்கி நகரவும், எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்ளும் தாங்கும்தன்மையை வலுப்படுத்த உதவுவதே நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
