டிக்டொக் செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனின் விசாரணையின் ஆரம்ப முடிவுகளில், செயலியில் உள்ள சில அம்சங்கள் போதைப்பொருள் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் எல்லையற்ற ஸ்க்ரோல், தானாக இயங்கும் காணொளிகள், புஷ் அறிவிப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை போன்ற அம்சங்கள் சிறுவர்களின் மனநலத்தை பாதிப்பதாகவும், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறும் செயல் எனவும் ஐரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டியுள்ளது.
2024 பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி, 13–18 வயது சிறுவர்கள் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் டிக்டொக்கை பயன்படுத்துகின்றனர். 12–15 வயது சிறுவர்களில் 7 சதவீதம் தினமும் 4–5 மணி நேரம் இந்தச் செயலியில் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென், டிக்டொக் தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விதிகளை மீறினால், நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
