ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட ‘என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ்’ நிறுவனத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ் நிறுவனத்தின் தலைவர் கசுஹிரோ ஹன்சாக்கி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி ஆகியோர் தங்களது நிறுவனங்களின் சார்பில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில், 20 முதல் 28 வயதுக்குட்பட்ட, தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழ் பெற்றவர்களாகவும், உயர்தர கல்வியை நிறைவு செய்தவர்களாகவும் உள்ள இலங்கை இளைஞர்கள், ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் பணியாற்ற தகுதி பெறுவர்.
ஜப்பானிய மொழி அறிவு கூடுதல் தகுதியாக கருதப்படும் நிலையில், தேவையான தொழில்முறை பயிற்சி மற்றும் மொழிப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
ஜப்பானிய மொழி மற்றும் தொழில்முறை பயிற்சிகள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கும் சபுகஸ்கந்த தொழில்முறை பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
