வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தணிக்கைச் சான்று வழங்கப்படாத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்படாததை கண்டித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையை கடுமையாக விமர்சித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைப் போலவே, தாம் இயக்கிய திரைப்படங்களுக்கும், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களுக்கும் தணிக்கைத்துறையால் ஏற்பட்ட சிரமங்களை பலமுறை எடுத்துரைத்துள்ளதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆனால் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலை, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுக் குரல்கள் எழாமல் தடுப்பதற்காக இவ்வாறு கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவது மிக மோசமான போக்காகும் என்றும், இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படைப்புச் சுதந்திரத்தை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றும் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
