2026 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 14 நாட்களுக்குள் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் நேற்று (13) வரை 68 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரி 12 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்பிரதி பொது பரிசோதகர் டபிள்யூ.பி.ஜே. செனதீர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
விபத்துகளுக்கான முக்கிய காரணமாக ஓட்டுநர்களின் அதிகமான சோர்வு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்ட நேர வேலைக்குப் பிறகு அதிகாலை 4 மணிக்கே பயணத்தைத் தொடங்குவதால் கடும் களைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக அவர் கூறினார்.
சோர்வான நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அலட்சியம் மனித உயிர்களை பறிக்கிறது என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை 7,000க்கும் மேற்பட்ட மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உயிரிழப்பு விபத்துகளில் 31 சதவீதம் பாதசாரிகளே உயிரிழந்ததாகவும், வீதிகளில் பாதசாரிகளே அதிக ஆபத்துக்கு உள்ளாகும் குழுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இந்த உயிரிழப்புகள் நோயால் அல்ல, விபத்துகளால் திடீரென உயிரிழக்கும் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட குடிமக்கள் எனக் குறிப்பிட்டார்.
இது நாட்டிற்கு பெரும் இழப்பாகும் என்றும், தங்களது உயிரையும், வாகனத்தில் உள்ளவர்களையும், வீதியில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாக்க பொறுப்புடன் வாகனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
