உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சித்தார்த்தனும் சி.வி.கே. சிவஞானமும் கடிதப்பரிமாறல்கள்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி நீங்கள் அனுப்பி வைத்த கடிதம் கிடைக்கப்பெற்றேன். இன நலன் குறித்து எங்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒற்றுமை பற்றி கடிதத்தில் நீங்கள் தெரிவித்துள்ள விடயங்களில் எக் காலத்திலும் நாங்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்ல.

உள்ளூராட்சித் தேர்தலில் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது பற்றி ஆராய விரும்பும் நீங்கள், தற்போது நாம் அமைத்துள்ள கூட்டணி உங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாகவும், உங்கள் கட்சிக்கு தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு தேர்தல்களைச் சந்திக்கும் நிலை கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பை அடுத்தே ஏற்பட்டது. தனித்துப் போட்டியிட்டு பின்னர் இணைந்து ஆட்சி அமைக்கும் எண்ணக்கருவை தங்களது மத்திய குழு மட்டக்களப்பில் கூடி எடுத்தீர்கள்.

இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சி வெளியேறியது. பிரிந்து நின்று செயற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை ஆணித்தரமாக நாம் முன்வைத்தபோதும் தமிழ் அரசுக் கட்சியின் செயல் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சம்பந்தன் அண்ணரிடம் எமது நிலைப்பாட்டை நாம் நேரடியாக முன்வைத்தபோதும் கூட அவரும் தமிழ் அரசுக் கட்சியின் முடிவினை ஏற்று செயற்படுமாறு எம்மை அறிவுறுத்தினார்.

அன்று கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறிய பின்னர் நாமும் ரெலோ அமைப்பும் இயன்ற வரையிலும் ஏனைய தமிழ் அமைப்புகளை ஐக்கியப்படுத்தி கூட்டமைப்பாக செயற்படும் நோக்கில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பாக பயணிக்க தொடங்கினோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் அதன் அங்கத்துவக் கட்சிகளினதும் தொடர்ச்சியான பிளவுகளினால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் ஆழமாக உணர்ந்துகொண்டோம்.

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து கட்சிகளாக இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக போட்டியிட்ட நாம், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு மிகவும் அவசியமான ஒற்றுமை எனும் விடயத்தை மேலும் வலுவானதாக்க சாத்தியமான வகையில் மேலும் சில அமைப்புகளை இணைத்துப் பயணிக்க தீர்மானித்து தொடர்ச்சியாக மேற்கொண்ட செயற்பாடுகளின் பலனாகவே இன்று பல கட்சிகள் இணைந்த கூட்டணியொன்றை உருவாக்க முடிந்துள்ளது.

நீங்கள் விரும்புவது போல, தமிழ் அரசுக் கட்சியுடன் இக்கூட்டணியும் இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ் தேசியத்திற்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் நாமும் பெரு விருப்பம் கொண்டுள்ளோம்.

எனவே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக நடைமுறைச் சாத்தியமான வகையில் எமது கூட்டணியுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய தீர்மானம் ஒன்றை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டு அறியத் தருவீர்களானால் அது பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிறைவேற்றுக் குழுவில் பேசி சாதகமான பதிலை தங்களுக்கு அறியத் தரமுடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp