புதிய சட்டமா அதிபரை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில், பொதுநிதி குழு தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா மேற்கொண்ட தலையீட்டு முயற்சியை, சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்ன தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2025 டிசம்பர் 8ஆம் திகதியிலிருந்து சட்டமா அதிபர் பதவி காலியாக உள்ள நிலையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்மொழிந்த நியமனங்களை அரசியலமைப்புச் சபை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியை தீர்க்கும் நோக்கில், அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியதாக டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதில், பொது நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், அந்தக் கடிதங்கள் எந்த விளக்கமும் இன்றி சபாநாயகரால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதும் பதில் கிடைக்கவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் இலங்கையும், தகுதியான ஒருவரை சட்டமா அதிபர் பதவிக்கு முன்மொழியுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளன.
மேலும், அரசியலமைப்புச் சபையின் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான புதிய விண்ணப்பங்கள் இதுவரை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
