கட்டுரை இந்தியா ஈழம்

குழந்தைகளுக்கான தமிழை மீட்டெடுப்போம்..!

தாயும் தந்தையும் எந்த மொழியில் பேசுகிறார்களோ அதுவே அவர்களின் குழந்தைகளுக்குத் தாய்மொழியாக அமைகிறது. குழந்தைகளும் அந்த மொழியின் வழியாகத்தான் தம் உரையாடலை நிகழ்த்தத் தொடங்குகின்றனர். அந்த உரையாடலின் வழி ஒன்றைப் புரிந்து கொள்ளவும் செய்யவும் முயல்கின்றனர்.

பெற்றோர்களின் உரையாடலைக் கூர்ந்து கேட்கவும் பேசவும் உரையாடவும் திறன் பெற்ற குழந்தைகளுக்கு எத்தனை பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை எத்தனை மொழியில் அறிமுகம் செய்தாலும் புரிந்து கொண்டு மீண்டும் எளிமையாகச் சொல்லப் பழகிவிடுகிறார்கள். இப்படிக் குழந்தைகள் பேசும் நிலையை அடிப்படை வகுப்பில் சேர்வதற்கு முன்பாகவே இல்லங்களில் பெற்றோரோடு உரையாடுகின்றபோதே பழகத் தொடங்கி விடுகிறார்கள். இப்படிப் பெற்றோர்களோடு தாய்மொழியைப் பேசி, கற்ற குழந்தைகளில் சிலர்தான் பல்வேறு காரணங்களாலும் தடைகளாலும் பின்னாட்களில் தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாமலும் வாசிக்கத் தெரியாமலும் மெல்லக் கற்கும் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். தாய்மொழி கற்றல் என்பது அவர்களுக்குக் கசப்பான ஒன்றாக மாறி விடுகிறது. நாம் மாற்றி விடுகிறோம்.

என் குழந்தை தமிழ் பேசுகிறது என்று பெற்றோர்கள் பெருமை பேசிய காலம் ஒன்று உண்டு. இப்பொழுதெல்லாம் இப்படிப் பேசுகின்ற பெற்றோர்கள் குறைந்து போய்விட்டார்கள். இதற்கு நேர் எதிராக என் குழந்தைக்குத் தமிழ் அவ்வளவா வராது எனப் பேசுவதைப் பெருமையாக எண்ணும் சூழல் உருவாகி விட்டது. இப்படித் தமிழ் கற்றலிலும் கற்பித்தலிலும் தேக்க நிலை உருவானதற்குப் பல்வேறு காரணங்களைக் கூற முடியும். இவற்றுள் முதன்மையானது தாய்மொழிவழிக் கல்வியை விடுத்து ஆங்கில வழிக் கல்விக்குள் நாம் பயணப்பட்டதே ஆகும்.

உங்கள் குழந்தைக்குத் தமிழ் சொல்லித் தருபவர் யார்?

உங்கள் குழந்தை மழலையர் வகுப்பிலோ அல்லது தொடக்கப் பள்ளியிலோ ஆங்கில வழியில் பயில்கிறார்களா? உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப் பாடம் நடத்தும் ஆசிரியர் யார்? அவர் என்ன பாடம் படித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர் வரும் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பில் கேட்டுப் பாருங்கள் ஒருவர் இருவரைத் தவிர ஏனைய ஆசிரியர்கள் தமிழ் மொழிப்பாடம் அல்லாத அறிவியல், கணிதம், வரலாறு, கணக்குப்பதிவியல், பொருளாதாரம், பொறியியல் போன்ற பட்டங்களைப் பெற்ற ஆசிரியர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்குத் தமிழ் மொழிப் பாடத்தின் எளிய கற்பித்தல் நுட்பங்கள் எப்படி வாய்க்கும்.

மொழிப்பாடம் படித்துப் பதினாறு ஆண்டுகள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பாடம் நடத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுச் சிந்தித்ததின் பயனாக உணர்ந்ததுதான் குழந்தைகளுக்கான மொழிப் பாடக் கற்பித்தலைச் சிக்கல் நிறைந்ததாக மாற்றி இருக்கிறோம் என்பது. தற்போது கற்பிக்கப்படும் குழந்தைகளுக்கான தமிழ் மொழிப் பாடத்தில் எளிமையான கற்பித்தல், கற்றலுக்கான கூருகளை அடையாளப்படுத்த முடிவதாக இல்லை.

உயிர்மெய்யை க் + அ = க எனக் கூட்டுவது சரி?

உயிர் + மெய் = உயிர்மெய். ( க் + அ = க ) உயிரையும் மெய்யையும் கூட்டுவதில் தற்போது உள்ள கூட்டல் முறையில் எழுகின்ற சிக்கலை ஆசிரியர்கள் உணர்ந்து கொண்டு மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் புதிய வழிமுறைகளை உருவாக்குதல் வேண்டும்.

க் + அ = க உச்சரித்துக் கூட்டுதல். இந்த முறையில் க் + அ = க என உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப்பதினாறு எழுத்துகள் நன்கு தெரிந்த ஒருவரால் மட்டுமே உயிர்மெய் எழுத்துகளின் அட்டவணையை முழுமையாக எழுதி முடிக்க முடியும். இது மனப்பாட முறையாக மட்டுமே அமைந்திருக்கும். இந்த முறையில் மெய்யும் உயிரும் கலத்தல் அமையாதிருப்பதை உச்சரிக்கும் போது நம்மால் உணர முடியும்.

குழந்தைக்கு உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் தெரிந்தாலே போதும். க் அ , க் அ, க் அ என மெய்யையும் உயிரையும் சேர்த்து உச்சரித்துக் கொண்டே இருந்தால் க் அ க, க் அ க “க” என்ற உயிர்மெய் எழுத்து எந்தத் தடையும் இல்லாமல் இயல்பாய் மெய்யும் உயிரும் இணைந்து உயிர்மெய் எழுத்தாகப் பிறந்துவிடுகிறது.

இப்படி உணர்ந்து மெய்யையும் உயிரையும் சேர்த்து இணைத்து உச்சிரிக்கக் கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் சிறுபயிற்சியும் முயற்சியுமே போதுமானவை. இந்தப் பயிற்சியை ஆசிரியர்கள் உணர்ந்து மெய்யையும் உயிரையும் சேர்த்துப் பழைய முறையில் இருந்த க் + அ = க என உச்சரிக்கும் போது + , = குறியீடுகள் மெய்யையும் உயிரையும் இணைக்காமல் இடையில் நின்று தடையாக இருப்பதை உணர்ந்து அந்தக் குறியீடுகளை நீக்கி க் அ க என நேரடியாக உச்சரித்துப் புதிய முறையில் பயிற்சியை எளிமையான முறையில் எடுத்துச்செல்லும் பொழுது குழந்தைகள் மெய்யையும் உயிரையும் சேர்த்தே உயிர்மெய்யை எளிமையாக உச்சரித்து இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகளைச் சுயமாக உருவாக்கிவி டுவார்கள்.

படி , எழுது என்பதோ பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினந்தோறும் சொல்லும் திருவாக்காக இருக்கிறது. இன்று பள்ளியில் என்ன கதை சொன்னார்கள்? என்று கேட்கும் பெற்றோர்களைவிட இன்றைக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள்? எனக் கேட்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. பாவம் குழந்தைகள் கதைகள் கேட்டு வளர வேண்டிய வயதில் எழுதித் தேய்கிறார்கள். இவற்றையெல்லாம் சற்று ஓரமாக வைத்துவிட்டுக் கதைகள் பேசத் தொடங்குவோம். கதைகளில் வழி அறத்தையும் அறச் சொற்களின் வழி சொற்களஞ்சியத்தையும் குழந்தைகளின் சிந்தனையில் சுமையின்றி இறக்கி வைக்கும் சூட்சமம் அறிவோம்.

குழந்தைகள் ஓடி விழட்டும் தூக்கும் குழந்தையை நண்பன் எனக் கூறி நட்பின் வலிமை பேசுவோம்.

கதைகள் சொல்லாமல் காணாமல் போன தாத்தாவும் பாட்டியும் கதைகளின் வழியாவது குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைப்போம்.

குழந்தைகள் அவர்களாகவே வளரட்டும். தாய் மொழியில் சிந்திக்கவும் பேசவும் கனவு காணவும் கற்றுக்கொடுப்போம். குழந்தைகளுக்கான தமிழைக் குழந்தைகளின் வழியே மீட்டெடுப்போம். தமிழ் வாழ்க என்று பதாகைகளில் மட்டும் இருந்துவிட்டால் போதாது எதிர்கால தலைமுறைகளின் சிந்தனைகளிலும் தமிழ் வாழ்ந்தாக வேண்டும்.

You may also like

கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு
இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp