இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் புதிய அரசாங்கம் முழுமையான உறுதியுடன் செயற்படுவதாகவும், இன மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலை ஒழிக்கும் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வகையான கருத்துகளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்களை கடந்த (02) ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்து பேசியபோது சபாநாயகர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.
அத்துடன், கனடா – இலங்கை உறவுகள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து வரும் தன்மை, கனடா வழங்கும் அபிவிருத்தி உதவிகள், மகாவலி திட்டம், தொழில்நுட்பக் கல்லூரிகள், கண்ணிவெடி அகற்றல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கிடைத்த ஒத்துழைப்புகள் குறித்து சபாநாயகர் நன்றியுடன் சுட்டிக்காட்டினார்.
கனடா பாராளுமன்றத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவது, அந்த நாட்டின் பன்முக கலாச்சார தன்மையின் பிரதிபலிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கனேடிய உயர்ஸ்தானிகரும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தையும் ஊழல் ஒழிப்பையும் முன்னிலைப்படுத்தி எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரண்டு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
