உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் பாய்வது ஏற்றுக்கொள்ள முடியாது- எப்.எம்.எம்

கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானிப்புகள் குறித்துத் தமது இயக்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாம் உறுப்பினராக உள்ள சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் இணையவழிப் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவாக விளக்கியுள்ளது.

குறிப்பாக, இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகள் இந்த விவகாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊடகவியலாளர்களின் தொழில்சார் நடவடிக்கைகளில் பொலிஸார் மறைமுகமாகத் தலையிடுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபங்களை மீறி, முறையான காரணங்களைத் தெரிவிக்காமல் ஊடகவியலாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கும் நடைமுறை குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், ஊடகப் பணிகளால் ஏற்படும் அவதூறு தொடர்பிலான முறைப்பாடுகளுக்காகவே இவர்கள் அழைக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரமானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட முடியும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அவதூறு என்பது இலங்கையில் ஒரு குற்றவியல் குற்றமல்ல என்பதால், அது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியாது.

இவ்வாறான விடயங்கள் சிவில் வழக்குகளாகவே நீதிமன்றங்களில் கையாளப்பட வேண்டும். அவ்வாறிருக்க, அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் அவதூறு குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வது, அதனை ஒரு குற்றவியல் செயலாகச் சித்தரிக்கும் முயற்சியாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆணைக்குழு, இணையப் பாதுகாப்பு அவசியமானது என்ற போதிலும் தற்போதைய சட்டம் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.

எனவே, பல தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று அம்சத் திட்டத்தையும் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கையையும் அதிலுள்ள பரிந்துரைகளையும் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp