10 ஆண்டுகள் காலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பொருத்தமான தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் முன்னிலையாகத் தேர்தல் ஆணைக்குழு தயாராக உள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்கனவே பல ஆய்வுகளை முன்னெடுத்துள்ள ஆணைக்குழு, அதில் சீர்செய்யப்பட வேண்டிய முக்கிய விடயங்களை அடையாளப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் சமீபத்தில் நியமிக்கப்பட்டது.
இந்தத் தெரிவுக்குழுவிடமிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தவுடன், தேர்தல் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் எல்லை நிர்ணய அறிக்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைய தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அடுத்தகட்ட நகர்வுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
