இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என வேண்டுகோள்விடுத்துள்ளது.
நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிராந்திய இயக்குநர் ஸ்மிரிதி சிங் இதனை தெரிவித்துள்ளார்
பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்கள் உடன்பட மறுப்பவர்களிற்கு மீண்டும் மீண்டும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் உறுதிமொழி வழங்கிய போதிலும் அது தொடர்ந்தும் சட்டப்புத்தகத்தில் நீடிப்பது குறித்தும் , பயங்கரவாத செயல் அல்லாத குற்றங்கள் உட்பட பலவற்றிற்கு தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து அறிந்துள்ள நாங்கள் அது குறித்து ஏமாற்றமடைகின்றோம்.
சமீபத்தில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது பயங்கரவாத தடைச்சட்டத்தை தெளிவாக துஸ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை ஆகும்
இதற்கு அப்பால் இந்த அரசாங்கம் பதவிக்குவந்தது முதல் பல தடவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகாரங்கள் ஏற்பாடுகளை பயன்படுத்தியுள்ளது,
2024 ஒக்டோபர் முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு பேரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் மார்ச் 2025 இல் 22 வயது இளைஞனை தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
நாங்கள் அறிந்த வகையில் இவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை.
பயங்கரவாத குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கான நியாய பூர்வமான சந்தேகங்கள் இல்லாத போதிலும், அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை அதிகாரிகள் தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம் என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
