இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீனவர்கள் மீது மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை மீனவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் வென்னப்புவை, வெள்ளமங்கரய மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 மீனவர்கள், சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு இலங்கை கடற்பரப்புக்குள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த ஆறு பேரை மீண்டும் அழைத்து வர மற்றொரு கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இந்நிலையில், அகில இலங்கை பலநாள் படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டைரன் மெண்டிஸ், சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று மீன்பிடி படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கை கடற்பரப்புக்குள் இருந்தபோதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்திய கடலோர காவல்படை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது உள்ளூர் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியதுடன், அரசும் கடற்படையும் இணைந்து பொருத்தமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த தாக்குதலை மனிதாபிமானமற்ற செயலாகவும் அவர் விவரித்தார்.
