டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவியாக இந்தியா மேலும் 10 ‘பெய்லி’ பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இப்பாலங்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொழும்பு நோக்கி இந்திய கடற்படையின் கப்பல் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்து மற்றும் போக்குவரத்து இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக மீளமைத்து அத்தியாவசிய சேவைகளை மக்கள் மீண்டும் பெறுவதனை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த ‘பெய்லி’ பாலங்கள் வழங்கப்படுவது, இந்தியா இலங்கைக்காக அறிவித்துள்ள 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய சிறப்பு பொருளாதார உதவி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அண்மையில் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உதவி தொகுப்பு அறிவிக்கப்பட்டது.
சூறாவளிக்குப் பிந்தைய அவசர மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை இந்தியா ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில், இந்த புதிய உதவி மீள்கட்டமைப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது.
இலங்கையின் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளில் இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் என ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதியளித்தார்.

