ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் தனியார் கல்வி. நிலையங்களின் உரிமையாளர்களை இணைத்து மாணவர்களின் சிகையலங்காரம் மற்றும் தனியார் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேசசபை கூட்ட மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை (24.03.2026) இடம்பெற்றிருந்தது.
ஆலையடிவேம்பு பிரதேசசபைக்குட்பட்டு இயங்கும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள் மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகையலங்காரம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 20வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற முறையில் சிகையலங்காரங்களை செய்யாமல் இருப்பதற்கு சிகையலங்கார உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் சிகையலங்கார உரிமையாளர்கள் தமது சிகையலங்கார நிலையங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் தனியார்கல்வி நிலையங்கள் பூரணை தினம் மற்றும் ஞாயிறு தினங்களில் மாணவர்களுக்கு தமது தனியார் கல்வி நிலையங்கள் விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதுடன் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் ஞாயிறு தினத்தில் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இதன்
போது தனியார் கல்வி நிலையங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தரம் 11, மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஞாயிறு தினத்தில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் நடத்த முடிவு எட்டப்பட்டதுடன் மாணவர்களின் ஒழுக்கம், சுகாதார வசதி ,தனியார் கல்வி நிலைய வகுப்பறைகளின் அடிப்டை வசதிகளின் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு உரிய நடைமுறைகளின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசசபை செயலாளர் சீவரெத்தினம் திவாகரன் பிரதி்த் தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி
பிரதேசசபை உறுப்பினர் S.புஸ்பராசா
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சிகையலங்கார கடை உரிமையாளர்கள்,தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன் தமது கருத்துக்களையும் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நிருபர்
செல்வி வினாயகமூர்த்தி
