கட்டுரை

ஆறாம் தரம் அடுத்த ஆண்டு… அதிர்வில் கல்வி சீர்திருத்தம்

“ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை தீர்மானம்”

ஆறாம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்து, அவற்றை 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட பாடத் தொகுதிகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஆறாம் தர ஆங்கிலப் பாடத் தொகுப்பில் இடம்பெற்ற பொருத்தமற்ற இணைய இணைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தேசிய கல்வி நிறுவனத்தின் ஆட்சி மன்றம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆறாம் தர சீர்திருத்தங்களுக்கு மேலதிக ஆய்வு அவசியம் என அமைச்சரவை இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, முதலாம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டில் தொடரும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவா தெரிவிக்கையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் பிழைகள் உள்ளதாகக் கூறப்படும் பாடத் தொகுதி புகைப்படங்கள், மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள அச்சிடப்பட்ட பிரதிகள் அல்ல என்றும், ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட முன் பிரதிகள் எனவும் விளக்கினார். அச்சிடும் முன்னர் குறித்த பிழைகள் திருத்தப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடத் தொகுதிகளில் இத்தகைய பிரச்சினைகள் இல்லை என அவர் கூறினார்.

கல்வி சீர்திருத்தம் தொடர்ச்சியான செயல்முறை எனக் குறிப்பிட்ட அவர், அனைத்தும் முற்றிலும் பூர்த்தியாகும் வரை காத்திருக்க முடியாது என்றும், ஆறாம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியைத் தவிர பிற பெரிய பிரச்சினைகள் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், பாடசாலைகள் ஜனவரி 21ஆம் திகதி மீண்டும் திறக்கும் போது மாணவர்களுக்கு பாடத் தொகுதிகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதற்கு முன்னரே அவை பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் எனவும் கூறினார்.

பொருத்தமற்ற இணைய இணைப்பு இடம்பெற்றதால், புதிதாக அச்சிடப்பட்ட ஆறாம் தர ஆங்கிலப் பாடத் தொகுதி இடைநிறுத்தப்பட்டதையடுத்து, கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து கல்வி அமைச்சு விசாரணையை ஆரம்பித்து CIDயில் முறைப்பாடும் தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் கல்வித் துறை தொழிற்சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்துடன் இணைந்த சில சங்கங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக சில தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மேலும், குழந்தைகளுக்கு பொருத்தமற்ற இணையதளங்கள் மற்றும் பல்வேறு பிழைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக பல தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சீர்திருத்தங்களை தற்காலிகமாக நிறுத்தி, அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து முழுமையான சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

இந்நிலையில், கல்வி சீர்திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் மற்றும் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி கல்வி அமைச்சின் முன்பாக தொடர்ச்சியான சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரවன்ச, தனது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு
கட்டுரை

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…!

  தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp