அமெரிக்கா உலக நாடுகளை அநியாய சுங்க வரிகள் மூலம் அச்சுறுத்தி வருவதை ஐரோப்பா இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனது அரசியல் ஆதிக்கக் கொள்கைகளுக்கு நாடுகளை கட்டாயப்படுத்த சுங்க வரிகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்கே, குற்றஞ்சாட்டினார்.
கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெப்ரவரி 1 முதல் 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்றும், அது 25 சதவீதமாக உயரலாம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனை குறித்த நாடுகள் கண்டித்துள்ளன.
ரஷ்யா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க வரிகளை முன்பு ஐரோப்பா விமர்சிக்கவில்லை; ஆனால் இப்போது தாமும் இலக்காகியுள்ளதால் எதிர்ப்பை வெளியிடுகிறது என வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற அமெரிக்க நடவடிக்கைகள் உலகளவில் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கையும் அமெரிக்காவின் பாகுபாடான சுங்க கொள்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பது பொருளாதார பயங்கரவாதம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச அணுகுமுறை உலக நாடுகளின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
