தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படை நேற்று 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களின் மூன்று மீன்பிடி படகுகளையும் கைது செய்துள்ளது.
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் தனித்த சம்பவமாக கைது செய்யப்பட்டனர் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை தகவலின்படி, கைது செய்யப்பட்ட 31 மீனவர்களும் அக்கரைப்பட்டை கடற்பகுதியில் இருந்து கடலுக்கு புறப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.
கடல் எல்லையை மீறியதாகக் கூறி இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு சென்றது.
‘இவ்வாறு மீண்டும் மீண்டும் நடைபெறும் மீனவர்கள் கைது சம்பவங்கள், கடலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தமிழக மீனவ சமூகத்தில் ஆழ்ந்த மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு கைது சம்பவமும் ஒரு குடும்பத்தின் பிரதான வாழ்வாதாரத்தை பறித்துக்கொள்வதோடு, அவர்களிடையே அச்சத்தையும் அசாதாரண நிலையையும் உருவாக்குகிறது,’ என ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 114 மீனவர்களும், 247 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

